நம்மில் பலர் முகம் மற்றும் சருமகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பில் ஒரு சதவிகிதம் கூட கால் பாதத்திற்கு கொடுப்பதில்லை. ஆனால், நம் உடலில் பாதத்தில் மட்டும் தான் எண்ணெய் சுரப்பிகளே கிடையாது. அதனால் தான் பாதங்கள் விரைவில் வறண்டு விடுகின்றன. பாதங்களில் வறட்சி அதிகரித்தால், அது குதிகால் வெடிப்பிற்கு வழிவகுக்கும். இது இல்லாம, பாதங்களில் வெடிப்பு ஏற்பட உடல் பருமன், பொருத்தமற்ற காலணிகளை அணிவது, நீண்ட நேரம் நிற்பது, சரும வறட்சி, சீரான பராமரிப்பு இல்லாதது போன்றவையும் பாத வெடிப்பிற்கு காரணங்களாக இருக்கலாம். இப்போது நாம் பாத வெடிப்பை வீட்டில் உள்ள சில பொரு்டகளை வைத்தே எப்படி போக்குவது என்பதை தெரிந்து கொள்வோம்…
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த சத்துக்கள் எல்லாம் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்கவும், சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளவும் உதவும். வாழைப்பழம் ஒரு நேச்சுரல் மாய்ஸ்சுரைசர் என்பதால் இதைக் கொண்டு பாதங்களைப் பராமரித்தால், பாதங்கள் வறட்சியின்றி ஈரப்பதத்துடன் இருக்கும்.
பயன்படுத்தும் முறை
நன்கு கனிந்த 2 வாழைப்பழங்களை நன்கு மென்மையாக மசித்துக் கொள்ளவும். அதை பாதங்களில் நன்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்த பின்னர் பாதங்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு குறைந்தது 2 முறை தூங்குவதற்கு முன்பு செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
தேன்
தேன் ஒரு நேச்சுரல் ஆன்டி-செப்டிக் என்பதால் குதிகால் வெடிப்புகளை சரிசெய்திட உதவும். அதோடு, சரும வறட்சியையும் தடுக்கும். கூடுதலாக, தேன் சருமத்திற்கு புத்துயிர் அளிக்கவும் உதவும்.
பயன்படுத்தும் முறை
ஒரு கப் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அந்நீரில் கால்களை வைத்து 20 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து தேய்க்க வேண்டும். பின்னர் பாதங்களை சுத்தமான நீரில் கழுவிடவும். இப்படி சில வாரங்கள் இரவு தூங்கும் முன்பு செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
அரிசி மாவு, தேன் மற்றும் வினிகர்
அரிசி மாவு ஒரு நேச்சுரல் எக்ஸ்போலியேட்டராக செயல்படக்கூடியது என்பதால் அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. அத்துடன் சிறிது தேன் சேர்த்துக் கொண்டால், குதிகால் வெடிப்பு குணமாகும். மேலும் வினிகரை சிறிது சேர்த்துக் கொண்டால், அது இறந்த செல்களை எளிதில் வெளியேற்ற உதவிடும்.
பயன்படுத்தும் முறை
2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் 5-6 துளிகள் வினிகரை சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். பின்பு, பாதங்களை வெதுவெதுப்பான நீரில் பத்து நிமிடம் ஊற வைத்த பின், தயாரித்து வைத்துள்ள பேஸ்ட் கொண்டு பாதங்களை மென்மையாக தேய்க்க வேண்டும். அதன் பின் பாதங்களை கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.