பொதுவாகவே நம் சருமம் மிகவும் மிருதுவானது என்பதால் தான் உடலின் பிற பகுதிகளை காட்லும் முகத்திற்கு அதிகப்படியான அக்கறை காட்டுகிறோம். நம்மை அழகாக காட்டுவது முகம் தானே. அப்படிப்பட்ட முகத்திற்கு வெறும் அழகு சேகரிப்பு மட்டும் போதுமானதாக இருக்காது. சரும பராமரிப்பு தான் அழகை கூட்டுவதற்கான முதற்படி. அதற்கு முதலில் முகத்தில் சரும துளைகளில் படிந்திருக்கும் அழுக்குகளை முறையாக அவ்வபோது அகற்றிட வேண்டும். பொதுவாக, சரும துளைகளை சுத்தம் செய்ய ஸ்கரப் எனும் சுத்திகரிப்பானை கடைகளில் வாங்கி பயன்படுத்துவர். ஆனால், அதுவும் ஏதோ ஒருவகை கெமிக்கல் தானே. அதற்காக தான் எந்த கெமிக்கலும் இல்லாத, பக்கவிளைவற்ற வீட்டிலேயே இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்தே சரும துளைகளை எப்படி சுத்தம் செய்வது என்பதைப் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்…

ஓட்ஸ்
உடல் எடை குறைப்பதில் மட்டுமின்றி, சரும பராமரிப்பிலும் ஓட்ஸ் பெரிதும் உதவுகிறது. ஓட்ஸ் சருமத்திற்கு சிறந்த ஸ்க்ரப்பாக உதவக்கூடும். அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன், வேக வைத்த ஓட்ஸ் அரை கப் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அந்த கலவையை முகத்தில் தடவி ஒரு 15 நிமிடம் ஊற விடவும். பின்னர், குளிர்ந்த நீரில் கழுவிடவும்.

முட்டை மற்றும் தேன்
ட்ரை ஸ்கின் பிரச்சனை இருப்பவர்களுக்கு எந்த பொருளை பயன்படுத்துவதற்கும் சற்று தயக்கம் இருக்க தான் செய்யும். அதனால் தான் இயற்கை பொருட்களை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இதன்மூலம், எந்த பக்கவிளைவும் இருக்காது, சருமமும் பிரகாசமாக மாறிவிடும். அதற்கு ஒரு முட்டையின் மஞ்சள் கரு, ஒரு டீ ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தயாரித்த கலவையை முகத்தில் தடவு 15 நிமிடங்கள் ஊற விட்டு பின்னர் கழுவிடவும். இதனால், சரும வறட்சி குறைவதோடு, சரும துளைகளில் இருக்கும் அழுக்குகளும் நீங்கிவிடும்.

அவகேடோ
இயற்கையாகவே அவகேடோ பழத்தில் எண்ணெய் பசை இருப்பதோடு, அது சரும நீரேற்றத்திற்கும் உதவக்கூடியது. இதனால் சரும வறட்சி குறைவும். அதற்கு அவகேடோ பழத்தை நன்கு மசித்து கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர், ஒரு துணியால் முகத்தை துடைத்துவிட்டு, முகத்தை நீரால் கழுவிடவும்.