உலகெங்கிலும் உள்ள பலரும் தங்களது முழங்கை மற்றும் முழங்காலின் கருமையால் மிகவும் சிரமப்படுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் முகம் பொலிவாகவும், பளிச்சென்றும் இருக்க பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் முழங்கைகள் மற்றும் முழங்கால்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால், உங்களை அழகாகக் காட்டுவதில் முகத்தை போலவே, கை, கால்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு என்பதை மறவாதீர்கள். அத்தகைய சூழ்நிலையில், முழங்கால்கள் மற்றும் முழங்கைகளை சுத்தம் செய்வது கடினமான காரியம் ஒன்றுமல்ல. இதற்காக நீங்கள் பார்லருக்குச் சென்று பணம் செலவு செய்ய வேண்டியதுமில்லை. இந்த கட்டுரையில் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே உங்க முழங்கை, முழங்கால்களில் உள்ள கருமையை எப்படி அகற்றுவது என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம்…
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் சருமத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இதில் போதுமான அளவு வைட்டமின் ஈ உள்ளது. இது சருமத்தின் நிறத்தை மிளிர செய்திடும். இதனுடன், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து, சேதமடைந்த சருமத்தை சரிசெய்யவும் உதவும். இதைப் பயன்படுத்த, குளித்த பிறகு, தேங்காய் எண்ணெயை சில துளிகள் எடுத்து, முழங்கைகள் மற்றும் முழங்கால்களில் லேசாக கைகளால் தடவி சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்யவும். நீங்கள் விரும்பினால், தேங்காய் எண்ணெயில் சில துளிகள் எலுமிச்சை சேர்த்து மசாஜ் செய்யலாம். இது தவிர, தேங்காய் எண்ணெயில் வால்நட் பொடியை சேர்த்து தடவுவதும் நல்ல பலனளிக்கும்.
சர்க்கரை
இயற்கையாகவே சர்க்கரை அருமையான ஸ்க்ரப்பர். சர்க்கரை துகள்கள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், இறந்த சருமத்தை அகற்றவும் பெரிதும் உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், சர்க்கரையில் ஆலிவ் எண்ணெயைக் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் மசாஜ் செய்து, வட்ட வடிவில் தடவி மசாஜ் செய்யவும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும். அதனை தொடர்ந்து செய்து வர நல்ல வித்தியாசத்தை காண முடியும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா ஒரு சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. ஏனெனில், இது கருப்பு நிறமிகளை நீக்கி பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தப்படுத்த உதவிடும். இதைப் பயன்படுத்த, பேக்கிங் சோடாவை பாலுடன் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். பின்னர், 5 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் மட்டுமே சுத்தம் செய்யவும்.
கற்றாழை
அனைத்து வித அழகு பராமரிப்பு பணிகளிலும் கற்றாழை முக்கிய இடம் வகிக்கிறது. கற்றாழை இயற்கையாகவே சருமத்தை ஒளிரச் செய்யும் தன்மையைக் கொண்டுள்ளது. இதனுடன், அதன் பயன்பாடு காரணமாக சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். மேலும், இது புதிய செல்களை உருவாக்கவும் உதவுகிறது. எனவே, முழங்கை, முழங்கால்களில் இதைத் தடவி வர, கருமை நீங்கி சருமம் பொலிவு பெறும்.