முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் உங்கள் அழகைக் கெடுப்பதாக தோன்றுகிறதா? அதற்காக பார்லர் சென்று நிறைய பணம் செலவிட மனமில்லையா? கவலையே வேண்டாம். உங்கள் வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்தே உங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை சுலபமாக அகற்றிடலாம். அதைப் பற்றி தான் இந்த கட்டுரையில் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

எலுமிச்சை மற்றும் தேன்
- இரண்டு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- இப்போது அந்த கலவையை சுமார் மூன்று நிமிடங்களுக்கு அடுப்பில் மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்.
- பின்னர் இந்த கலவையை நீர்த்துப்போகச் செய்ய சிறிது தண்ணீர் சேர்க்கவும். அந்த கலவை நன்கு பேஸ்ட் பதத்திற்கு வந்த பிறகு நன்கு ஆற வைக்கவும்.
- இப்போது, முகத்தில் முடி அதிகம் உள்ள பகுதிகளில் சோள மாவை எடுத்து தடவவும். அதன் பிறகு, முடி வளர்ந்திருக்கும் திசையில் தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை பரவலாக தடவி விடவும்.
- இப்போது ஒரு வாக்ஸிங் துணி அல்லது காட்டன் துணியைப் பயன்படுத்தி முடியை அகற்றவும்.
- முடி வளர்ந்திருக்கும் திசைக்கு எதிர்திசையில் துணியை இழுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பார்லர் சென்று வாக்ஸிங் செய்தது போன்ற பலன் கிடைக்கும்.

சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு
- முதலில், இரண்டு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறுடன் 8-9 டீஸ்பூன் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
- பின்னர் இந்த கலவையில் கொதிக்க தொடங்கும் வரை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
- அதன் பிறகு, அதை நன்கு ஆற வைத்து ஒரு ஸ்பேட்டூலா அல்லது ஸ்பூன் உதவியுடன் முடி அதிகம் இருக்கும் பகுதிகளில் தடவி சுமார் 20-25 நிமிடங்கள் உலர விடவும்.
- அது நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் வட்ட வடிவில் தேய்த்து நன்கு கழுவவும்.
- இவ்வாறு தேய்க்கும் போது முடி அகன்று முகம் பளிச்சென்று மாறிவிடும்.