கோடைகாலத்தில் ஒட்டுமொத்த உடலுமே கருத்துவிடும். அதிலும், குறிப்பாக நம் பாதங்கள் தான் வெயிலுக்கு முதலில் பலியாவது. இருசக்கர வாகனத்தில் வெயிலில் செல்லும் போதெல்லாம் கால் பாதங்கள் நெருப்பில் வைத்தது போல் எரியும். ஒரு நாள் வெயிலில் சென்றாலே பாதங்கள் கருத்து அசிங்கமாகிவிடும். அழகு என்பது ஒட்டுமொத்த உடலுக்குமே பொருந்தும். எனவே, பாதங்களின் கருமையை போக்குவதும் அழகு பராமரிப்பு முக்கியமானது. அதையும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுலபமாக செய்து விடலாம். சூரிய ஒளியைத் தவிர, பாதங்கள் கருமையாவதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. மாசுபாடு, பூஞ்சை, தொற்று, பாக்டீரியா, மோசமான இரத்த ஓட்டம் மற்றும் நீரிழிவு போன்ற மருத்துவ நிலைமைகளும் கால்களை கருமையாக மாற்றக்கூடும். அதிலும், வெயிலில் சென்று வந்தால் செருப்பு அணிந்த தடம் மட்டும் தெரியும். இதுபோன்ற நிலைமைகளை, சரி செய்ய உதவும் எளிய வீட்டு வைத்தியங்களை தான் இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…
எலுமிச்சை மற்றும் சர்க்கரை
முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு எலுமிச்சை சாறுடன் ஒரு டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்போது பாதங்களின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறைந்தது 10-15 நிமிடங்களுக்கு இந்த கலவையைத் தடவி மெதுவாக ஸ்க்ரப் செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். ஒவ்வொரு நாளும் இதே போன்று தொடர்ந்து செய்து வர வேண்டும். இதன்மூலம், வெயிலின் தடம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை
ஒரு சிறிய உருளைக்கிழங்கை எடுத்து அதை தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து, சுத்தமான துணியில் வடிகட்டு சாறு எடுத்து கொள்ளவும். இப்போது அந்த உருளைக்கிழங்கு சாறு மற்றும் நன்கு பழுத்த எலுமிச்சை பழத்தின் சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும். இதனை 15-20 நிமிடங்கள் அப்படியே ஆற விட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் கால்களைக் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறையாவது இதை செய்து வர நல்ல வித்தியாசத்தை காணலாம்.
தயிர் மற்றும் கடலை மாவு
ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கடலை மாவு, அரை கப் கெட்டி தயிர் மற்றும் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். அதன் பிறகு அந்த பேஸ்ட்டை இரண்டு கால்களிலும் தடவி மெதுவாக தேய்த்து மசாஜ் செய்து 30-35 நிமிடம் அப்படியே விட்டு விடவும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் கழுவியதும், மறவாமல் மாய்ஸ்சரைசர் தேய்க்கவும். முதன்முறை இதை செய்த உடனே கருமை குறைந்திருப்பதை நீங்கள் உணரலாம். வாரத்திற்கு இரண்டு முறையாவது இதைச் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.