மற்ற காலங்களை விட கோடைகாலத்தில் அதிகப்படியான வெயிலின் தாக்கத்தால் வியர்வையும் அதிகமாக சுரக்கும். இதனால் சருமம் மட்டுமின்றி கூந்தலுக்கும் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் வெளியே செல்லும்போது, கடுமையான சூரிய ஒளி மற்றும் அதிக வெப்பம் காரணமாக, தலையில் வியர்வை அதிகரித்து, காற்றில் உள்ள அழுக்குகளும் முடியில் சேர்ந்து கொண்டே இருக்கும். இதன் காரணமாக, சொறி, உச்சந்தலையில் அரிப்பு அல்லது பிற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இதனால் ஏற்படக்கூடிய முக்கிய பிரச்சனை என்றால், துர்நாற்றம் வீசுவது. உண்மையில், முடியில் சேரும் பாக்டீரியா மற்றும் எண்ணெய் பசை ஆகியவையும் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணம். இந்த பிரச்சனையால் தினந்தோறும் தலைக்கு குளிக்க முடியாது அல்லவா. அதிலும், தலைக்கான வாசனை திரவியங்கள் உபயோகிப்பதும் அவ்வளவு நல்லதல்ல. ஆனால், ஒவ்வொரு முறையும் இந்த பிரச்சனை தொடர்ந்தால், அத்தகைய சூழ்நிலையில், ஒருவர் நிறைய சங்கடத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். இன்று உங்களின் இந்த பிரச்சனையை போக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்களைப் பற்றி இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…
வெங்காயச் சாறு
வெங்காயச் சாறு கூந்தலுக்குச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. பொடுகு மற்றும் கூந்தலில் ஏற்படும் அரிப்பு பிரச்சனை நீங்குவதைத் தவிர, அது கூந்தலை வலிமையாக்கி வளர்ச்சியைத் தூண்டும். மேலும், முடியில் இருந்து வரும் துர்நாற்றத்தை நீக்க வெங்காய சாறு மற்றும் எலுமிச்சை சாறை பயன்படுத்த வேண்டும். முதலில் ஒரு பாத்திரத்தில் மூன்று டீஸ்பூன் வெங்காயச் சாறு எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது இந்த கலவையை உச்சந்தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு அலசிடவும்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் மூலம் முடியில் சேரும் கெட்ட பாக்டீரியாக்களை நீக்கிடலாம். இதற்கு ஒரு கிண்ணத்தில் மூன்று டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்து அதில் 2 கப் தண்ணீரை சேர்க்கவும். முதலில் ஒரு லேசான க்ளென்சர் மூலம் தலைமுடியைக் கழுவ வேண்டும். பின்னர் இந்த கலவையை உச்சந்தலை மற்றும் முடியில் தடவ வேண்டும். அதன் பிறகு, அதை உலர விட்டு, பின்னர் சாதாரண நீரில் முடியை கழுவவும். வாரத்திற்கு ஒரு முறையாவது இதைச் செய்யுங்கள். இதனால் தலையில் துர்நாற்றம் வீசும் பிரச்சனை முழுவதும் நீங்கிடும்.
எலுமிச்சை
வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, தலையில் இருக்கும் எண்ணெய் பசையை நீக்கும் தன்மை கொண்டது. தலை முடியில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றும் ஆற்றலும் எலுமிச்சைக்கு உண்டு. இதற்கு ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதை தலைமுடியில் தடவுவதற்கு முன்பு சுத்தம் செய்து, பின்னர் இதைத் தடவி, சிறிது நேரம் அப்படியே வைத்திருந்த பிறகு, தலைமுடியை சாதாரண நீரில் கழுவவும். இதனால் கூந்தல் எந்தவித துர்நாற்றமின்றி எப்போதும் ப்ரஷாக இருக்கும்.