முகம், கை, கால் என உடலில் இருக்கக்கூடிய தேவையற்ற முடிகளை அகற்ற நிறைய பேர் பார்லர் சென்று வேக்சிங் மூலம் அகற்றி கொள்வது உண்டு. ஆனால், பலருக்கு அதில் விருப்பம் இருக்காது. அப்படிப்பட்டவர்கள் வீட்டில் இருந்து எதாவது செய்து முடியை அகற்ற முடியாதா என்று தேடுவர். அதில் நிறைய முறைகளைப் பின்பற்றியும் பலனளிக்காமல் போவதுண்டு. அப்படி நீங்கள் உடலில் தேவையில்லாத முடியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஸ்கரப் தயாரித்து சுலபமான முறையில் தேவையற்ற முடியை அகற்றிடலாம். அதைப் பற்றி தான் இந்த கட்டுரையில் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றை முயற்சி செய்து பாருங்கள், நிச்சயம் உங்களுக்கு நல்ல பலனை கிடைக்கும்…
தேன், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு:
தேன், சர்க்கரை மற்றும் எலுமிச்சைச் சாறு இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து பேஸ்ட் போல் தயாரித்து கொள்ளவும். இந்த பேஸ்டை தேவையற்ற முடிகள் மீது தடவி மசாஜ் செய்யவும். உடனே செய்யவும் இல்லையெனில், அந்த பேஸ்ட் காய்ந்து விடும். மசாஜ் செய்து சில நிமிடங்கள் கழித்து, தண்ணீர் தடவி முடியை மெதுவாக அகற்ற முயற்சிக்கவும்.
பார்லி மற்றும் எலுமிச்சை:
எலுமிச்சைச் சாற்றுடன் பார்லி பொடியை கலந்து முகத்தில் தடவவும். சுமார் 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, உள்ளங்கைகளை ஈரப்படுத்தி, மெதுவாக முடியை அகற்ற முயற்சிக்கவும்.
கடலை மாவு:
கடலை மாவு, மஞ்சள் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் போல் நன்கு கலந்து கொள்ளவும். பின்னர், அதனை முகத்தில் தடவி நன்கு ஆறியதும் அகற்றிடவும். வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கப்பட்ட இந்த பேஸ்ட்
முடியை அகற்றுவதில் மிகவும் பயனுள்ளதாகவும் சிறந்ததாகவும் கருதப்படுகிறது.
வெந்தயம்:
ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை எடுத்து அதனுடன் மசித்த பச்சைப்பயறு சேர்க்கவும். மேலும், அதில் சிறிது வெதுவெதுப்பான நீரை சேர்க்கவும். இப்போது அதை ஒரு மென்மையான பேஸ்டாக அரைத்து கொள்ளவும். இப்போது தயாரித்த அந்த பேஸ்ட் பஞ்சால் தொட்டு முகம் அல்லது முடி அகற்ற விரும்பும் இடத்தில் தடவி உலர விடவும். பின்னர் தண்ணீர் தொட்டு முடியை அகற்றவும்.
சோள மாவு:
கார்ன்ஃப்ளார் மற்றும் சர்க்கரையை முட்டையுடன் கலந்து கொள்ளவும். இப்போது அதை பேஸ்ட் போல கலந்து முகம் அல்லது கை, கால்களில் தடவவும். இறுதியாக, அது நன்கு உலர்ந்த பின் ஒரு துணியின் உதவியுடன் இந்த பேஸ்ட்டை மென்மையாக தேய்த்து அகற்றவும்.