ஒரு கப் காபி குடித்து உங்களது நாளை தொடங்கினால் அன்றைய தினம் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக வைத்திருக்க அது உதவிடும் என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். காபியை பருகுவதற்கு மட்டுமே பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், காபி தூளை சரும அழகை மேம்படுத்தவும், கூந்தல் பொலிவை அதிகரித்திட செய்யவும் பயன்படுத்தலாம் என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். ஆம், இந்த கட்டுலையில் நாம் காபியை கூந்தல் பராமரிப்பிற்கு எப்படி பயன்படுத்துவது என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம்…
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் காபி
உண்மையில், காபி முடியை பொலிவாகவும், வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவக்கூடியது. அதுமட்டுமின்றி, முடியின் வளர்ச்சியையும் தூண்டக்கூடியது. காபியில் ஆக்ஸினேற்ற பண்புகள் உள்ளதால், அவை ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் ஹேர் சீரம்களில் பயன்படுத்தப்படுகின்றன. வேண்டுமென்றால், காபியைப் பயன்படுத்தி நீங்கள் வீட்டிலேயே காபி ஹேர் மாஸ்க் தயார் செய்து தாராளமாக பயன்படுத்தலாம். அனைவரது வீட்டிலும் இருக்கக்கூடிய இந்த காபி உங்கள் கூந்தல் வளர்ச்சியைத் தூண்டி, அவை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்க உதவிடும்.
காபியை கூந்தலுக்கு பயன்படுத்தும் முறைகள்
#1
ஒரு கடாயில் 2 கப் தேங்காய் எண்ணெயை ஏற்றி சூடாக்கவும். இப்போது அதில் 1/4 கப் வறுத்த காபி கொட்டைகளைச் சேர்த்து, சிறிது நேரம் மூடி வைத்து குறைவான தீயில் வேக விடவும். குறிப்பாக அவை கருகி விடாமல் பார்த்து கொள்ள வேண்டியது அவசியம். பின்னர், அடுப்பை அணைத்திடவும். இப்போது எண்ணெயை வடிகட்டி, காபி கொட்டைகளை தனியாக ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து பின்னர் பயன்படுத்தி கொள்ளலாம். வடிகட்டிய எண்ணெயை முடியின் வேர்க்கால் முதல் நுனி வரை படும் படி நன்கு தேய்த்து 10 நிமிடங்களுக்கு மசாஸ் செய்யவும். பின்னர், ஒரு மணி நேரம் ஊற வைத்து ஷாம்பு போட்டு கழுவிடவும்.
#2
முதலில் 1 டீஸ்பூன் காபி தூள் மற்றும் 2 டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் இரண்டையும் எடுத்து ஒன்றாக சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும். இப்போது தயாரித்த அந்த பேஸ்டை முடியின் வேர் முதல் நுனி வரை தடவவும். இப்போது அதை சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் ஊற விட்டுவிட்டு, பின்னர் ஷாம்பு போட்டு தலைமுடியை அலசிடவும். இப்படி செய்வதன் மூலம் கூந்தல் வலுவடைந்து, பொலிவாக காணப்படும்.
#3
1 டேபிள்ஸ்பூன் காபி தூள் மற்றும் 2 டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தயாரித்த அந்த கலவையை கூந்தலின் வேர் முதல் நுனி வரை முழுவதும் தடவவும். பின்னர், 30 முதல் 40 நிமிடங்கள் வரை அப்படியே ஊற வைத்து, பின்னர் ஷாம்பு போட்டு தலைமுடியை அலவிடவும். இது கூந்தலுக்கு பளபளப்பான தோற்றத்தைக் கொடுப்பதோடு முடியை அடர்த்தியாக வளரவும் செய்திடவும்.