இன்றைய காலக்கட்டத்தில், பெண்கள் தங்கள் தலைமுடியைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள். நீளமான, அடர்த்தி முடி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. ஆனால், எல்லாருக்கும் அப்படி கிடைத்திடுவது இல்லை. அதற்காக பெண்கள் பலரும் நிறைய பணம் செலவு செய்யவும், பிற வழிமுறைகளைப் பின்பற்றவும் தயாராக உள்ளனர். இன்றைய மாசடைந்த சூழ்நிலை அதிகப்படியான முடி உதிர்வு முதல் பொடுகு தொல்லை வரை பல பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது. அதிலும், தெரியாமல் சிலர் செய்யக்கூடிய சிறு சிறு தவறுகள் கூட முடி உதிர்விற்கு காரணமாக இருக்கலாம். இப்போது அதைப் பற்றி தான் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம். குறிப்பாக, தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது செய்யக்கூடாத தவறுகளைப் பற்றி இந்த கட்டுரையில் சொல்ல போகிறேன்…
சூடான எண்ணெயைத் தடவுவது
தலைக்கு எண்ணெயை சூடுபடுத்தி பயன்படுத்த வேண்டுமென்று கூறுவதை அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், அதற்காக சுட சுட எண்ணெயை தலையில் தடவக்கூடாது. எண்ணெய் நன்கு ஆறி வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பின்னர் தான் தேய்க்க வேண்டும். சூடான எண்ணெயைத் தலையில் தடவினால் முடியின் வேர்க்கால்கள் வலுவிழக்க செய்து, அதிகப்படியான முடி உதிர்விற்கு வழிவகுக்கும்.
முரட்டுத் தனமாக மசாஜ் செய்வது
தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டியது கூந்தலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். ஆனால், அப்படி மசாஜ் செய்யும் போது நேரக்கூடிய தவறு என்னவென்றால், அவர்கள் முடியை தீவிரமாக தேய்ப்பது. உண்மையில், இவ்வாறு செய்வதன் மூலம், முடியின் வேர்கள் வலுவிழக்கத் தொடங்கி, அவை உதிர ஆரம்பிக்கும்.
முடியை இறுக்கமாக கட்டுவது
பெரும்பாலானோர் தலைக்கு எண்ணெய் தேய்த்த பின்னர் முடியை தூங்கி இறுக்கமாக கொண்டை போட்டு கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பர். ஆனால், அவ்வாறு செய்வதன் மூலம் முடியின் வேர்க்கால்கள் சேதப்படுத்தக்கூடும். எனவே, இனி தலைக்கு எண்ணெய் தேய்த்தவுடன் இறுக்கமாக கொண்டை போடும் பழக்கத்தை கைவிடுங்கள்.
நீண்ட நேரம் எண்ணெய் வைத்திருத்தல்
முடியில் எண்ணெய் தடவி 2 மணி நேரத்திற்குள் தலையை ஷாம்பு அலசி விட வேண்டும். பலரும், இரவு தூங்குவதற்கு முன்பு எண்ணெய் தடவி மறுநாள் காலை எழுந்து குளிக்கின்றனர். ஆனால், அது தவறான செயல். தலையில் எண்ணெய் தேய்த்து நீண்ட நேரம் வைத்திருக்க கூடாது. இவ்வாறு செய்வதால், தலையில் அதிகப்படியான அழுக்குகள் சேர்ந்து அவை பொடுகு தொல்லைக்கு வழிவகுக்கும். எனவே, இனி இரவில் எண்ணெய் தேய்த்து காலையில் தலை அலசும் பழக்கத்தை விட்டு விடுங்கள். குளிப்பதற்ககு 2 மணி நேரத்திற்கு முன்பு எண்ணெய் தேய்த்தால் போதுமானது.