ரொம்ப கஷ்டப்பட்டு, தெரியாத மசாலாக்களை வறுத்து அரைத்து குழம்பு எப்படி வருமோ என்று கவலையிலேயே அசைவ உணவுகளை சமைக்க வேண்டுமென்ற அவசியமில்லை. மிகவும், சுலபமாக, வீட்டில் உள்ள சாதாரண மசாலாக்களை வைத்து, அட்டகாசமான ஒரு சிக்கன் ரெசிபி செய்யலாம். செய்முறையும் சுலபம் தான். ஒரு முறை செய்து பாருங்கள் அடிக்கடி செய்ய தோன்றும். பேச்சுலர்ஸ் கூட இதை செய்து பார்க்கலாம். வாருங்கள், மசாலா சிக்கன் ஃப்ரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1 கிலோ
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
வெங்காயம் – 1 (நீளமாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
செய்முறை
*முதலில், சிக்கனை நன்கு கழுவி அத்துடன் மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
*இப்போது வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
*பின்னர், இதே வாணலியில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
*அத்துடன், ஊற வைத்த சிக்கனை சேர்த்து அதிக தீயில் ஒரு 10 நிமிடங்களுக்கு வதக்கவும்.
*பின்னர், அத்துடன் நறுக்கிய தக்காளி சேர்த்து கிளறி விட்டு, மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து 5 நிமிடங்கள் அதிக தீயில் வேக வைக்கவும்.
*பிறகு, ஒரு கிளறு கிளறிவிட்டு, மூடி போட்டு மூடி 15 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வேக வைக்கவும்.
*அடுத்ததாக, வதக்கி எடுத்து வைத்த வெங்காயத்தை தூவி, கிளறி விட்டு, 10 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் மூடி வைத்து வேக விடவும்.
*சிக்கன் நன்கு வெந்தவுடன், அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான, அட்டகாசமான மசாலா சிக்கன் ப்ரை ரெடி…