உங்களுக்கு மட்டன் ரெசிபி ரொம்ப பிடிக்குமா? மட்டனில் எப்போதும் ஒரே விதமான ரெசிபி செய்பவராக இருந்தால் சற்று வித்தியாசமாக ஒரு மட்டன் ஃப்ரை செய்து பாருங்கள், இது நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். இது சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றிற்கு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். சரி வாருங்கள், இப்போது சிந்தி மட்டன் ஃப்ரை ரெசிபி எப்படி செய்வதென்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…
தேவையான பொருட்கள்
- மட்டன் - அரை கிலோ
- பச்சை பப்பாளி விழுது - ஒரு கிண்ணம்
- எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
- இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
- தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
- தக்காளி - 1 (அரைத்தது)
- கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது
- கரம் மசாலா - 1 டீஸ்பூன்
- மல்லி தூள் - 1 டீஸ்பூன்,
- பச்சை மிளகாய் - 1
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- சீரகம் - ஒரு டீஸ்பூன்
- ஏலக்காய் - 3
- உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை
- முதலில் மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளவும். இப்போது அரைத்த பப்பாளி விழுதை மட்டன் துண்டுகளுடன் சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரத்திற்கு ஊற விடவும்.
- இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில், சீரகம், ஏலக்காய், மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
- பின்னர், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- இதனுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்ககவும்.
- இப்போது அதில் பப்பாளி விழுதில் ஊற வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- மட்டன் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். இப்போது அதில், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலாவும், அரைத்த தக்காளியையும் சேர்த்து கிளறவும்.
- மசாலாக்களின் பச்சை வாசனை போகும் வரை வதக்கியதும், அதில் தயிர் ஊற்றி நன்கு கிளறி விடவும்.
- இதற்குப் பிறகு, இறுதியாக, இரண்டு கப் வெதுவெதுப்பான தண்ணீரைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து மட்டனை நன்கு வேக வைக்கவும்.
- மட்டன் மசாலா அடிபிடிக்காமல் இருக்க அவ்வபோது கிளறி விடவும்.
- மட்டன் நன்கு வெந்தவுடன் கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கினால் சிந்தி மட்டன் ஃப்ரை பரிமாற தயார்…