மாலை வேளையில் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து தர வேண்டும். ஆனால், என்ன செய்வதென்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். நாம் செய்வதை அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் இருக்க வேண்டும். அதே நேரம், வேலையும் குறைவாக இருக்க வேண்டும் என்று தான் அனைவருமே விரும்புவர். அதற்கு ஏற்றது தான் பணியாரம். இதற்காக தனியாக அரிசி அரைக்க தேவையில்லை. ஏனென்றால், நாம் பார்க்க போவத ரவா பணியாரம். இதன் செய்முறை மிகவும் சுலபமானது. ஆனால், வீட்டில் உள்ள அனைவருமே இதை வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். சரி, வாருங்கள், ரவா பணியாரம் செய்முறையைத் தெரிந்து கொள்வோம்…
தேவையான பொருட்கள்:
- ரவா - 1/2 கப்
- தண்ணீர் - 1/2 கப்
- பொடித்த வெல்லம் - 1/2 கப்
- மைதா - 1/4 கப்
- கோதுமை மாவு - 1/4 கப்
- துருவிய தேங்காய் - 1/4 கப்
- ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
- பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு பௌலில் ரவையை எடுத்து, அதில் அரை கப் நீரை ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்கவும்.
- அத்துடன், பொடித்த வெல்லத்தையும் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
- பின்பு அதில் மைதா மற்றும் கோதுமை மாவை சேர்த்து கெட்டி இல்லாமல் நன்கு கிளறி விடவும்.
- அதன் பின் துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.
- பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும், ஒரு கரண்டியில் பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
- இதேப்போன்று அனைத்து மாவையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான ரவா பணியாரம் தயார்.
Image Courtesy: yummytummyaarthi