ரம்ஜான் நோன்பு மேற்கொள்பவர்களுக்கு ஏதுவாக, மாலை வேளையில் செய்து சுவைக்க ஏற்றாற்போல சுலபமான கீமா மசாலா எப்படி செய்வதென்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் நெருங்கியதால் இதனை ரம்ஜான் ஸ்பெஷல் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, பிற நாட்களிலும் செய்து சாப்பிட மிக எளிமையாக ருசியான ரெசிபி இது. இப்போது பட்டர் கீமா மசாலா எப்படி செய்வதென்று பார்க்கலாம்… செய்து சாப்பிட்டு விட்டு எப்படி இருந்ததென்ற தங்களது கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்…
தேவையான பொருட்கள்:
கீமா – 1 கிலோ
வெண்ணெய் – 1 கப்
தயிர் – 500 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2
கிராம்பு – 5
பட்டை – 1
கருப்பு ஏலக்காய் – 2
பச்சை ஏலக்காய் – 2
பச்சை மிளகாய் – 5
பிரியாணி இலை – 2
உப்பு – சுவைக்கேற்ப
மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை:
*முதலில், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி, அதில் ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
*அத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை நன்கு வதக்கவும்.
*அடுத்ததாக, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
*பின்பு, 1 கப் தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த் நன்கு கொதிக்க விடவும்.
*நீர் கொதிக்கும் நேரத்தில், மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கழுவி எடுத்து வைத்துள்ள கீமாவை சேர்த்து வதக்கவும்.
*கீமா நன்கு வதங்கியதும், அத்துடன் தக்காளி சேர்த்து நன்கு வேக விடவும்.
*இப்போது, கீமாவுடன், தக்காளி சேர்ந்து நன்கு வதங்கியதும், எடுத்து வைத்துள்ள வெண்ணெயை சேர்த்து பிரட்டி, மற்றொரு அடுப்பில் கொதிக்கும் நீருடன் சேர்த்து கிளறவும்.
*பிறகு, சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நீர் வற்றும் வரை கீமாவை நன்கு வேக விடவும்.
*கீமா நன்கு வெந்தவுடன், தயிர் சேர்த்து கிளறவும். தயிர் முழுவதுமாக கீமா உறிஞ்சும் வரை வேக விடவும்.
*பின்னர், கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பட்டர் கீமா மசாலா தயார்.
*இந்த பட்டர் கீமா மசாலா சப்பாத்தி, நாண் போன்றவற்றிற்கு அட்டகாசமாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்கள்…