பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது. இந்த பொங்கலுக்கு எப்போதும் செய்யும் பச்சரிசி பொங்கலுக்கு பதிலாக சற்று வித்தியாசமாக வேறு எதாவது செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில், சிறு தானியத்தில் பொங்கல் செய்து பாருங்களேன். அதுவும் திணையை வைத்து அட்டகாசமான பொங்கல் செய்யலாம். அது தான், திணை கருப்பட்டி பொங்கல். நீங்கள் உடல்எடையை குறைக்க டயட் இருப்பவராக இருந்தால் கூட இந்த பொங்கலை தாராளமான சாப்பிடலாம். வாருங்கள், இப்போது திணை கருப்பட்டி பொங்கல் எப்படி செய்வதென்று பார்க்கலாம்…
தேவையான பொருட்கள்:
- நெய் - 3 டேபிள் ஸ்பூன்
- பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
- திணை - 1/2 கப்
- தண்ணீர் - 2 கப்
- கருப்பட்டி - 1 கப்
- முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
- உலர் திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
- சுக்கு பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய்யை ஊற்றவும். அது சூடானதும், பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- இப்போது, அதனுடன் திணையை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- பின்பு 2 கப் தண்ணீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து வேக விடவும்.
- அதே சமயம், மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் கருப்பட்டியை போட்டு, சிறிது நீர் ஊற்றி, கருப்பட்டி முற்றிலும் கரைந்ததும் இறக்கிடவும்.
- பிறகு வேக வைத்த திணையுடன், கருப்பட்டி நீரை வடிகட்டி ஊற்றி நன்கு கிளறி விடவும்.
- இப்போது அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி, ஏலக்காய் பொடி மற்றும் சுக்கு பொடி சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கிடலாம்.
- இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி, முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தயாரித்து வைத்துள்ள திணை பொங்கலுடன் சேர்த்து கிளறினால், அட்டகாசமான திணை கருப்பட்டி பொங்கல் தயார்.
Image Courtesy: yummytummyaarthi