இன்றைய காலக்கட்டத்தில், அனைவரும் விரும்பும் ஒரே விஷயம் ஆரோக்கியமான உடல்நிலை. தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அனைவருமே தங்களுக்கு தெரிந்தது, தெரியாதது என எல்லாவற்றையும் பின்பற்றி வருகின்றனர். உடலுக்கு எதாவது நல்லது என சொல்லி கேள்விப்பட்டுவிட்டால், அதை எப்படியாவது செய்தே ஆக வேண்மென்ற எண்ணம் பலருக்கு உண்டு. அதில் ஒன்று தான் சிரிப்பு வைத்தியம். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், கண்ணீர் விட்டு அழுதால் கூட உடலுக்கு நல்லது தானாம். ஆமாம், இப்போது அழுவதினால் உடலுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி சற்று தெரிந்து கொள்வோம்…
மனதை அமைதியாக்கும்
மனதில் இருக்கும் பாரம் குறையும் வரையில் நன்கு அழுது முடித்த பின்பு, உங்களது மனம் சற்று லேசானது போல் உணர்வீர்கள். அது உண்மை தான். ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மனதில் இருக்கும் அதிகப்படியான சுமையானது கண்ணீர் வழியாக வெளியேறி விடுவதால், மனம் லேசாக மாறிவிடுகிறதாம்.
எதிர்மறை எண்ணத்தை விரட்டிடும்
மனதில் அழுத்தம் அதிகரிக்கும் போதோ அல்லது சுமை அதிகரிக்கும் போதோ நமக்கு அறியாமல் நம் கண்களில் நீர் வந்துவிடும். மனதில் ஏதாவது எதிர்மறை எண்ணம் இருந்தால், கண்டிப்பாக அழுது அதனை வெளியேற்றிட வேண்டும். ஏனென்றால், கண்ணீர் மூலமாக நமக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணம் வெளியேறிவிடுமாம்.
கண்களை சுத்தப்படுத்திடும்
கண்களும், மாசு, தூசு, அழுக்கு என அனைத்தையும் எதிர்கொள்கிறது. பல தீங்கு விளைவிக்கக்கூடிய அழுக்குகள் கண்களுக்கு அருகில் சேரக்கூடும். நாம் அழும் போது அவை கண்ணீரின் மூலமாக வெளியேறி விடுகிறது. கண்ணீரில் உள்ள லைசோசைம், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு கூறுகள் ஆகும். எனவே, கண்ணீர் வெளியே வரும்போது, ஒருவரது கண்கள் தெளிவாகின்றன.
கண்களில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்
ஒரு சிலருக்கு அழுகையே வராது. அப்படி அழாமல் இருப்பதன் மூலம், கண்களின் உள்ள சவ்வின் மென்மையானது குறையத் தொடங்குவிடுமாம். இது நம் கண்பார்வையை பாதிக்கக்கூடும். கண்களில் இருந்து வரும் கண்ணீர் கண் சவ்வின் மென்மையை பராமரிக்கிறது. இது கண்களில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.
குழந்தைகள் தூக்கத்திற்கு உதவும்
குழந்தைகள் என்றாலே அழுவது வழக்கம் தான். ஆனால், அந்த அழுகையிலும் சில நன்மைகள் இருக்க தான் செய்கின்றன. ஆமாம், குழந்தைகளின் அழுகை, அவர்கள் நன்றாக தூங்ழுவதற்கு உதவும் என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அழுகையானது, குழந்தைக்கு அமைதியான மனநிலையை அதிகரிக்கவும், வலியைக் குறைக்கவும் உதவிடும். இதன் விளைவாக அவர்கள் நன்றாகவும் வேகமாகவும் தூங்கிடுவர். அழுவதனால், பெரியவர்களுக்கும் தூக்கத்தை அதிகரித்திடுமா என்பது குறித்து இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை.
குறிப்பு
மேலே கூறியுள்ள எல்லாவற்றையும் நாங்கள் உறுதிப்பட கூறவில்லை, அதை முழுவதுமாக ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகலாம்.