Karnataka style sambar recipe in tamil: சைவ உணவு என்றவுடன் அனைவருக்கும் நினைவிற்கு வரும் பிரதானமான உணவுகளில் ஒன்று தான் சாம்பார். அத்தகைய சாம்பாரை எப்போதும் ஒரே மாதிரியாக வைக்காமல், சற்று வித்தியாசமான ருசியில் செய்து சுவைப்பது நன்றாக இருக்கும். அந்த வகையில், வித்தியாசமான சாம்பாரில் கர்நாடகா சாம்பாரும் முக்கிய இடம் வகிக்கிறது. இப்போது கர்நாடகா சாம்பார் எப்படி செய்வதென்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
- கத்திரிக்காய் - 5-6
- முருங்கைக்காய் - 2
- வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- சின்ன வெங்காயம் - 10
- தக்காளி - 1 (நறுக்கியது)
- துவரம் பருப்பு - 1/2 கப்
- துருவிய தேங்காய் - 1/4 கப்
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- வெல்லம் - 1 நெல்லிக்காய் அளவு
- புளி கரைசல் - சிறிதளவு
- உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு…
- மல்லி - 1 1/2 டீஸ்பூன்
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- கடலைப் பருப்பு - 1/4 டீஸ்பூன்
- அரிசி - 1 டீஸ்பூன்
- வரமிளகாய் - 5-10 (காரத்திற்கு ஏற்ப)
தாளிப்பதற்கு…
- நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
- முதலில் முருங்கைக்காய் மற்றும் கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு வைக்கவும்.
- இப்போது துவரம் பருப்பை கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், 2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி வைத்து 3-4 விசில் விட்டு இறக்கி, பருப்பை நன்கு மசித்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய முருங்கைக்காயைச் சேர்த்து வேக வைக்க வேண்டும். முருங்கைக்காய் பாதி வெந்ததும், அதில் கத்திரிக்காய், தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து, 10 நிமிடம் வேக விடவும்.
- அதே சமயம் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து குறைவான தீயில் பொன்னிறமாக வறுத்து, ஆற வைத்து, தேங்காய், புளி தண்ணீர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- காய்கறிகள் வெந்ததும், அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பு, அரைத்த மசாலா, வெல்லம் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, குறைவான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.
- கடைசியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சாம்பரில் ஊற்றினால், சுவையான கர்நாடகா ஸ்டைல் சாம்பார் ரெடி.
Image Courtesy: smithakalluraya
அட்டகாசமான சுவையில் முட்டை கபாப்!!!