கோடைகாலம் வந்தாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது ஐஸ்க்ரீம் தான். கோடை வெயிலின் உக்கிரத்தை தணிக்க ஐஸ் க்ரீம் சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும் என்று தோன்றும். ஆனால், கடையில் எவ்வளவு தான் ஐஸ்க்ரீம் வாங்கி சாப்பிட முடியும். இருப்பினும், இந்த நாட்களில் வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருப்பது மிகவும் அவசியம். இனி அந்த கவலை வேண்டாம். வீட்டிலேயே சுலபமாக குல்ஃபி செய்யலாம். இதை செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை அசத்துங்கள். சரி, இப்போது குல்ஃபி எப்படி செய்வதென்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…
தேவையான பொருட்கள்
- பால் - 1 கப்
- சர்க்கரை - 1/2 கப்
- குங்குமப்பூ - 1/4 தேக்கரண்டி
- ஏலக்காய் - 4-5
- பாதாம் - 2 டீஸ்பூன்
- குல்ஃபி மோல்டு
செய்முறை
- முதலில் ஒரு பெரிய கடாயில் பாலை ஊற்றி அதை அடுப்பில் மிதமான தீயில் வைத்து தொடர்ந்து கிளறி விடவும். பால் பாதியாகக் குறைந்ததும், தீயைக் குறைக்கவும்.
- இப்போது பால் சுமார் 30 முதல் 40 நிமிடங்களில் நன்கு கெட்டியாகிவிடும். அதன் பிறகு, பால் முழுவதுமாக காய்ந்ததும், ஒரு கெட்டியான கிரீம் போல தோற்றமளிக்கும் மற்றும் பாத்திரத்தின் நடுவில் கொதிக்க ஆரம்பிக்கும்.
- இப்போது அதில் சர்க்கரை மற்றும் குங்குமப்பூவைச் சேர்த்து கிளறி ஓரிரு நிமிடத்திற்கு கொதிக்க விடவும்.
- அதன் பிறகு அத்துடன் ஏலக்காயை சேர்த்து தீயை அணைக்கவும்.
- இப்போது அது நன்கு ஆறியதும், அதில் நறுக்கிய பாதாம் பருப்புகளைச் சேர்த்து ஐஸ் க்ரீம் அச்சுகளில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்திடவும்.
- 2 முதல் 4 மணி நேரத்திற்கு பின்னர், ஐஸ் க்ரீம் அச்சுக்களை எடுத்து அதை நீரில் நனைத்து கத்தியின் உதவியால் ஐஸ் க்ரீமை வெளியே எடுத்து இறுதியாக அலங்கரிக்க சிறிது நட்ஸ் தூவி குல்ஃபியை பரிமாறவும்.