சிக்கனை வைத்து ஒரு புதுவிதமான ரெசிபி செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்களா? அப்படியெனில், தால் சிக்கன் எனும் பருப்பு சிக்கனை செய்து பாருங்களேன். இது செய்வது மிக சுலபம். ஆனால், இதன் சுவை அற்புதமாக இருக்கும். வீட்டில் உள்ள அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவையானது இருக்கும். வாருங்கள், இப்போது பருப்பு சிக்கன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம்…
தேவையான பொருட்கள்:
- சிக்கன் - 250 கிராம்
- பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
- கறிவேப்பிலை - சிறிது
- தக்காளி - 1 (நறுக்கியது)
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தேங்காய் துவையல்
- உப்பு - சுவைக்கேற்ப
- பாசிப்பருப்பு - 1/2 கப்
- தண்ணீர் - 2-3 கப்
- கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு…
- நெய் - 1 டேபிள் ஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி விட்டு, 30 நிமிடங்களுக்கு நீரில் ஊற வைக்கவும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
- அத்துடன் பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் நீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
- நீர் நன்கு கொதிக்க தொடங்கியதும், அடுப்பை குறைவான தீயில் வைத்து, பாத்திரத்தை மூடி சிக்கனை சுமார் 25 நிமிடங்கள் வேக விடவும்.
- சிக்கன் வெந்தவுடன் அதில் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை போட்டு, 15 நிமிடங்களுக்கு மறுபடியும் கொதிக்க வைக்கவும்.
- பாசிப்பருப்பு நன்கு வெந்ததும், பாத்திரத்தை இறக்கிடவும்.
- அடுத்ததாக, ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதங்கியதும், அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பிறகு அதை இறக்கி வைத்துள்ள பருப்பு சிக்கனுடன் சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவினால், பருப்பு சிக்கன் தயார்.
Image Courtesy: yummytummyaarthi