தினமும் காலை ஒரே மாதிரியான உணவு செய்கிறீர்களா? ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டுமென்ற ஆசை உங்களுக்கு இருக்கிறது என்றால், எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய கச்சோரி செய்யுங்களேன். இது சுவையாக இருப்பது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட. எனவே, நல்ல ஆரோக்கியமான சுவையான ஒன்றைச் செய்ய கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் அல்லவா? அப்படிப்பட்ட ஒன்று தான் தேங்காய் கச்சோரி. இது செய்வது மிக சுலபம் தான். ஆனால், சிறு நுணுக்கம் உள்ளது. அதை செய்ய தவறினால் சரியாக வராது. எனவே, இங்கே கொடுத்தப்படி சரியாக செய்தால் கடைகளில் கிடைக்கக்கூடிய ருசியான தேங்காய் கச்சோரியை சுலபமாக நீங்கள் செய்திடலாம். சரி, இப்போது தேங்காய் கச்சோரி எப்படி செய்வதென்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…
தேவையான பொருட்கள்
- தேங்காய் துருவல் - 1 கப்
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீஸ்பூன்
- ரவை - 1 கப்
- தயிர் - 1 டீஸ்பூன்
- தண்ணீர் - 1/2 கப்
- உப்பு - சுவைக்கேற்ப
- பூண்டு-இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டீஸ்பூன்
செய்முறை
- தேங்காய் கச்சோரி செய்ய முதலில் ரவையை ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும். அத்துடன், தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- அதன் பிறகு, ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவலை எடுத்து, அத்துடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம்மசாலா, உப்பு, இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிரட்டவும்.
- இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
- பின்னர், ரவை மாவை எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து அதன் நடுவே தேங்காய் மசாலாவை வைத்து மீண்டும் உருட்டவும். இதே போல் எல்லாவற்றையும் தேய்த்து மசாலா வைத்து உருட்டி கொள்ளவும்.
- எண்ணெய் நன்கு சூடானதும், அதில் உருட்டி வைத்த கச்சோரிகளை போட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
- இப்போது, சூடான தேங்காய் கச்சோரி பரிமாற தயார்…