அசைவம் என்று சொன்னாலே சிக்கன், மட்டன் என செய்து போர் அடிக்குதா? அப்படியெனில், ஹோட்டல் ஸ்டைலில் சில்லி இறால் செய்து பாருங்கள். அதை எப்படி சுலபமாக செய்வதென்று இப்போது தெரிந்து கொள்வோம். பேச்சுலர்ஸ் கூட இதை ட்ரை செய்து பார்க்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் விதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
ஊற வைப்பதற்கு…
- இறால் - 3/4 கிலோ
- இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
- சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
- கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
- உப்பு - சுவைக்கேற்ப
வதக்குவதற்கு…
- நறுக்கிய குடைமிளகாய் - 1 கப்
- கறிவேப்பிலை - சிறிது
- நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
- சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
- சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
- முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்து கொள்ளவும்.
- பின்னர், ஒரு பாத்திரத்தில் இறாலைப் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து பிரட்டி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
- பின்பு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- அத்துடன் சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- பின்பு, அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் இறாலை வேக விடவும்.
- இரண்டு நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, இறாலைக் கிளறி விட்டு, மீண்டும் 2 நிமிடம் இறாலை வேக வைக்கவும்.
- இறால் நன்கு வெந்ததும், அதன் மேல் வறுத்து எடுத்து வைத்த கறிவேப்பிலையைத் தூவி இறக்கினால், சுவையான சில்லி இறால் தயார்.