சீஸ் யாருக்கு தான் பிடிக்காது. அதிலும், குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் பொருட்களில் சீஸ் ஒன்று. உங்கள் வீட்டில் கோதுமை மாவு மற்றும் சீஸ் இருக்கிறதா? அப்படியெனில், உடனே இந்த சீஸ் பூரியை செய்து கொடுத்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். மாலை வேளையில் வீட்டில் உள்ளவர்களுக்கு அற்புதமான ஸ்நாக்ஸாக இது இருக்கும். சரி, வாருங்கள் இப்போது சீஸ் பூரி எப்படி செய்வது என்பதை இந்த கட்டுரையைப் படித்து தெரிந்து கொள்வோம்…
தேவையான பொருட்கள்:
பூரி மாவிற்கு…
- கோதுமை மாவு - 1 கப்
- ரவை - 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு…
- சீஸ் - 1 கப் (துருவியது)
- வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
- ஒரு பௌலில் கோதுமை மாவு, ரவை, உப்பு, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக பூரி பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- பின் அந்த மாவை ஈரத் துணியால் மூடி ஒரு 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
- இப்போது பூரி உள்ளே வைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு பௌலில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
- பின்னர், சிறிது மாவை எடுத்து உருண்டையாக உருட்டி, அதை சப்பாத்தி போல் தேய்த்து, அதற்கு நடுவே சிறிது சீஸ் கலவையை வைத்து மூடி உருட்டி கொள்ளவும்.
- பின் அதை மீண்டும் தட்டையாக பூரிக்கு தேய்ப்பது போல் தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
- இதேப் போன்று அனைத்து மாவையும் தேய்த்துக் கொள்ளுங்கள்.
- பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக பொரித்தெடுத்தால், சுவையான சீஸ் பூரி தயார். இதை கெட்சப் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
Image Courtesy: yummytummyaarthi