வேதபுரி தட்சிணாமூர்த்தி திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது. தேனி மாவட்டம் வேதபுரி எனும் ஊரில் அமைந்துள் இந்த கோயில் பாண்டிய மன்னர்களுக்கு பிறகு இப்பகுதியை ஆட்சி புரிந்த அரசர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இப்போது இங்கு வாழும் பக்தர்கள் அனைவரது முயற்சியாலும் கோயில் புதிதாக கட்டப்பட்டு உள்ளது.

இந்த கோயிலின் பிரதான மூலவர் பிராக்ஞா தட்சிணாமூர்த்தி. இவர், 9 அடி உயரத்தில் தெற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். கருவறையின் விமானத்தில் பஞ்சாட்சர மந்திரத்தை குறிக்கும் வகையில் 5 கலசங்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த கோயிலில் பூஜை நேரங்களில் மட்டுமே தேங்காய் உடைக்கும் விதி பின்பற்றப்படுகிறது. மேலும், தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலைக்கு பதிலாக, அதை பொட்டலமாக சமர்ப்பிக்கும் படி பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், இந்த கோயிலில் கற்பூரம் ஏற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கோயிலில் தினமும் 5 கால பூஜைகள் நடைபெறுகின்றன. அது தவிர, விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். வியாழக்கிழமைகளில் இந்த கோயிலில் தட்சிணாமூர்த்தி பகவானை வழிபட பக்தர்கள் அதிகளவில் வருவதுண்டு. இந்த கோயிலில் வியாழக்கிழமை அன்று திருமண வரம், பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு அவை நிச்சயம் கிடைக்குமாம். குழந்தைகள் கல்வி கலைகளில் சிறக்க, விரும்பிய காரியங்கள் நடக்க இங்கு வழிபட்டால் அது உறுதியாக கிடைக்கப்பெறும் என்று அனுபவம் பெற்ற பக்தர்கள் கூறுகிறார்கள்.