மாறிவரும் இன்றைய காலகட்டத்தில், பரபரப்பான வாழ்க்கை முறையாலும், அதிகரித்து வரும் பொறுப்புகளாலும் ஒருவர் அதிகப்படியான எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளாவது சாதாரணம் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் சிலர் தேவைக்கு அதிகமாக கோபப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் பிறர் என்ன பேசினாலும் கோபம் கொள்வார்கள் அல்லது தேவையில்லாமல் ஒருவருடன் சண்டையிடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், அதனை ஜோதிட கண்ணோட்டத்தில் பாருங்கள். அப்படி ஜோதிடக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இது கிரக தோஷங்களுடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம்.
ஜோதிடத்தின்படி, கோபம் என்பது நடத்தை மற்றும் மனதுடன் தொடர்புடையது மட்டுமல்ல, ராகு மற்றும் செவ்வாய் தோஷத்தாலும், ஒருவர் அதிக கோபமடையலாம். இருப்பினும், இதற்கும் ஜோதிடத்தில் சில பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கிரகங்களின் தோஷங்களைக் குறைத்து கோபத்தைக் கட்டுப்படுத்தலாம். எனவே கோபத்தைக் குறைக்க உதவும் ஜோதிட பரிகாரங்களைப் பற்றி இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
சந்தனம்
ஜோதிட சாஸ்திரப்படி அதிகமாக கோபப்படுபவர்கள் சந்தனத்தைப் பயன்படுத்துவது சிறந்த பலனை அளிக்கும். ஏனென்றால், சந்தனம் உங்கள் மனதை அமைதியாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், ராகு தோஷத்திலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.
வெள்ளி
ஜோதிட சாஸ்திரத்தின்படி, உங்கள் பேச்சில் எப்போதும் கோபம் அதிகமாக இருந்தால், உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த, வெள்ளி ஆபரணங்கள் எதையாவது அணிவதை வழக்கப்படுத்தி கொள்ளுங்கள். அது வெள்ளி மோதிரம், வெள்ளி செயின் எதுவாக இருந்தாலும் சரி. வெள்ளியைப் பயன்படுத்துவது மனதை அமைதிப்படுத்தும். மேலும், சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் அதிலிருந்து விடுபட வெள்ளியைப் பயன்படுத்தலாம்.
சூரியன் வழிபாடு
எவர் ஒருவர் எப்போதும் கோபத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறார்களோ, அவர்களுக்கு நட்பு வட்டாரம் என்பது மிகவும் சிறியதாகவே இருக்கும். எப்போதும் ஒருவரை உங்கள் பேச்சால் காயப்படுத்தி கொண்டே இருப்பவராக இருந்தால், உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த, தினமும் காலையில் குளித்த பிறகு சூரிய பகவானுக்கு தண்ணீர் சமர்ப்பித்து, சூரிய பகவானை வேண்டி தியானியுங்கள்.
சிவப்பு நிறத்தைத் தவிர்க்கவும்
அன்றாட வாழ்வில் சிவப்பு நிற ஆடைகளை அதிகமாக பயன்படுத்துவதைத் தவிர்ப்பதன் மூலம் உங்கள் கோபத்தைத் தவிர்த்திட முடியும். எனவே, உங்களுக்கு கோபம் அதிகமாக வருகிறது என்றால் சிவப்பு நிற ஆடைகளைப் பயன்படுத்துவது குறைத்து கொள்ளுங்கள். சிவப்பு நிறம் இயற்கையாகவே கோபத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. எனவே, நீங்கள் வெள்ளை அல்லது கிரீம் நிற ஆடைகளைத் தேர்வு செய்து அணியுங்கள்.
அனுமன் சாலிசா பாராயணம் செய்யவும்
அனுமன் சாலிசாவை தினமும் பாராயணம் செய்து வருவதன் மூலம், இது செவ்வாய் கிரகத்தை அமைதிப்படுத்துவது மட்டுமல்லாமல் கோபத்தையும் குறைக்கிறது. இது தவிர வீட்டில் காலை மாலை இரு வேளைகளிலும் கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றவும். இவ்வாறு செய்வதன் மூலம் கோபம் குறையும்.