2022ம் ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம் இன்றைய தினம் நிகழ்கிறது. அதுவும், சனிச்சரி அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம் நிகழ்வது கூடுதல் சிறப்பு. இந்த சூரிய கிரகணம் பகுதி நேர சூரிய கிரகணமாக இருக்கும். அதுவும் இன்று நள்ளிரவு இந்த சூரிய கிரகணம் தொடங்கும். இந்த கிரகணம் முக்கியமாக அண்டார்டிகா பகுதியில் தெரியும். தென் அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியிலும், அட்லாண்டிக் பெருங்கடலிலும் இதைக் காணலாம். ஆனால், இந்த கிரகணம் இந்தியாவில் பார்க்க முடியாது என்பதால் இந்தியாவின் வானியற்பியல் வல்லுநர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சூரிய கிரகணம் என்றால் என்ன?
வானியலாளர்களின் கூற்றுப்படி, சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி கதிர்கள் சில குறிப்பிட்ட நேரத்திற்கு பூமியின் மீது விழாது. இதுவே சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இது எப்போதாவது அமாவாசை நாளில் நடக்கும். அத்தகைய சூரிய கிரகணம் தான் இன்றைய தினம் நடக்கவிருக்கிறது.
சூரிய கிரகணம் நிகழும் நேரம்
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30ஆம் தேதியான இன்று நள்ளிரவு 12:15 மணிக்கு தொடங்கி அதிகாலை 04:07 மணி வரை நீடிக்கும். இது ஒரு பகுதி சூரிய கிரகணமாக இருக்கும்.
சூரிய கிரகணத்தை எப்போது பார்க்க முடியும்?
வானியலாளரின் கூற்றுப்படி, இந்த பகுதி நேர சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இன்று இரவு 12:15 மணி அளவிற்கு தொடங்கும் என்றும், கிரகணத்தின் உச்சம் அதிகாலை 2.11 மணிக்குத் தெரியும் என்றும் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், கிரகண நேரம் அதிகாலை 4.07 மணி அளவிற்கு முடிவடையும்.
கிரகணத்தை பார்க்க வேண்டுமா?
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. ஒருவேளை இந்த மாபெரும் வான நிகழ்வில் நீங்கள் ஆர்வமுள்ளவர்களாக இருந்தால் சூரிய கிரகணத்தை இருந்த இடத்தில் இருந்தே பார்ப்பதற்கு அருமையான வழி ஒன்று உள்ளது. அது தான் ஆன்லைன். யூடியூப்பில் ஆன்லைன் மூலமாக சூரிய கிரகணத்தை அனைவராலும் பார்க்க முடியும். யூடியூப்பில் பல சேனல்கள் இந்த சூரிய கிரகணத்தை நேரலையில் காட்டுகின்றன. விருப்பமுள்ளவர்கள் இதில் கண்டு களிக்கலாம்.