ஈசனை மணப்பதற்காக தேவி ஒற்றைக்காலில் நெருப்பின் மீது நின்று தவமிருந்த இடம் தான் மாங்காடு. தேவி இங்கு மேற்கொண்ட கடுமையான தவத்தின் மூலம் மனம் இறங்கிய ஈசன், இதற்குப் பின்புதான் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரராக காமாட்சியை மணந்து கொண்டார் என்பது வரலாறு. காஞ்சிபுரத்தில் காஞ்சி காமாட்சி அம்மனுக்கு எவ்வளவு மகத்துவம் இருக்கின்றதோ, அப்படித்தான் மாங்காடு காமாட்சி அம்மனும்.

இந்த கோவிலில் ‘அர்த்தமேருஸ்ரீசக்கரம்’ மிகவும் விசேஷமானது. தீப்பிழம்புகளுக்கு இடையே ஒற்றைக்காலில் நின்றுகொண்டு, ஈசனை நினைத்து கண்களை மூடிய நிலையில் அம்பாள் இருப்பதை இத்தளத்தில் காணலாம். இக்கோவிலின் மூலஸ்தானத்தில் அம்பாளை நான்கு வடிவில் தரிசிக்க முடியும். ஸ்ரீ சக்கர வடிவில் அம்பாள், பஞ்சலோகத்தாலான காமாட்சியம்மன், அக்கினியில் தவம் செய்யும் காமாட்சி அம்மன், காமாட்சி அம்மனுக்கு அருகில் அணையாமல் ஜோதி வடிவில் எரிந்துகொண்டிருக்கும் காமாட்சி அம்மன் விளக்கு. இவை நான்கையும் அம்மனின் அம்சமாகவே கருதி வழிபடுகிறார்கள்.

இந்த கோவிலில் தேவி ஈசனை மணம் முடிப்பதற்காக தவமிருந்து மணக்கோலம் பெற்றதால், திருமணமாகாதவர்கள் எலுமிச்சை மாலை அணிவித்து காமாட்சி அம்மனை வேண்டிக் கொண்டால் நிச்சயம் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை வரம் இல்லாதவர்கள் தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டாகும்.

கோயம்பேட்டில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும், தாம்பரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் மாங்காடு அமைந்துள்ளது.