2022ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் புத்த பூர்ணிமா தினத்தன்று திங்கட்கிழமை, அதாவது இன்றைய தினம் நிகழவுள்ளது. சந்திர கிரகணம் காலை 7:58 மணிக்கு தொடங்கி, 11:25 மணிக்கு முடிவடையும். இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் காணமுடியாது. இந்த காலத்தில் எந்தவொரு சுப காரியத்தையும் செய்யக்கூடாது. மேலும், கோவில்களின் நடையும் சாத்தப்படும். இந்த சந்திர கிரகணம் விருச்சிக ராசியில் நிகழவுள்ளதாக அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கக்கூடும். மேலும், சில ராசிகளுக்கு சுப பலன்களும், சில ராசிகளுக்கு அசுப பலன்களும் ஏற்படக்கூடும். குறிப்பாக, சந்திர கிரகணம் 5 ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும். சரி, இப்போது இன்றைய சந்திர கிரகணத்தால் சிக்கலை சந்திக்க போகும் ராசிக்காரர்கள் யார் யார் மற்றும் அதற்கான பரிகாரம் பற்றி என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

மேஷம்
சந்திர கிரகணம் மேஷ ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே, இன்றைய தினம் உங்கள் உடல்நலத்தில் மிகவும் அக்கறையுடன் இருக்க வேண்டும். அதிலும், உண்ணும் உணவில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தாரின் உடல்நலத்திலும் அக்கறை செலுத்துங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்றைய தினம் அவர்களது எதிரிகளிடம் சற்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, உங்கள் கண்ணுக்கு தெரியாத எதிரிகளிடம் எச்சரிக்கை தேவை. உடன் இருப்போரே உங்களுக்கு துரோகம் செய்ய முயற்சிக்கலாம். யாரையும் எளிதில் நம்பி விட வேண்டாம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்களது பேச்சுவார்த்தை மற்றும் நடத்தையில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். மேலும், தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பேசினால், உங்கள் வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்களால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எனவே, நீங்கள் வீண் விவாதம் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்திடுவது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, உங்களது ராசியில் இன்று சந்திர கிரகணம் நிகழ்கிறது. எனவே, நீங்கள் யாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இன்று உங்கள் பேச்சினாலேயே வீண் சிக்கல்களில் மாட்டி கொள்வீர்கள். இதனால், உங்கள் வேலையும் இன்று பாதிக்கப்பட்டு மனஉளைச்சலுக்கு ஆளாகக்கூடும். குறிப்பாக, இன்று வாகனத்தை கவனமாக ஓட்டவும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்கும். குறிப்பாக, ஆடம்பர செலவுகளால் உங்கள் சேமிப்பு கரையும். இன்று யாரிடமும் எந்த தொகையையும் கடனாக வாங்க வேண்டாம், யாருக்கும் கடன் கொடுக்கவும் வேண்டாம். மேலும், புதிய முதலீட்டு வாய்ப்புகள் தேடி புத்திசாலித்தனமாக யோசித்து முடிவெடுப்பது நல்லது.
பரிகாரம்
- சந்திர கிரகணத்தால் ஏற்படும் தோஷங்களைத் தவிர்க்க சிறந்த வழி சிவபெருமானை வணங்கி, சந்திர பகவானின் மந்திரங்களை உச்சரிப்பது தான்.
- பிறருக்கு தானியங்கள் முதலியவற்றை தானம் செய்வதன் மூலம் சந்திர கிரகணத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.