எல்லா கோவில்களிலும் சனி பகவான் நவக்கிரகத்தில் ஒருவராகத்தான் காட்சி தருகின்றார். தமிழ்நாட்டில் திருநள்ளாறுக்கு அடுத்தபடியாக, தனியாக ஒரு கோவில் இருக்கிறது என்றால் அது இந்த குச்சனூர் சனிபகவான் கோவில் தான். இங்குள்ள சனிபகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து நீக்கியதாக வரலாறு கூறுகின்றது. சனி பகவான் இங்கு சுயம்புவாக அருள் பாவிப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு. அரூபி வடிவமான லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டேயிருப்பதால் மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாவும் கூறப்படுது. இந்த கோவில்ல துணைத் தெய்வங்களாக அருள்மிகு சோணைக் கருப்பண சுவாமி, அருள்மிகு லாட சன்னியாசி ஆகியோர் இருக்கின்றனர்.

இங்கு காகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த கோவிலில் பூஜை முடிந்தவுடன் பிரசாதமானது முதலில் காகத்திற்கு தான் வைக்கப்படும். காகம் எடுக்காவிட்டால் அது அபசகுனமாக கருதப்பட்டு, பூசாரிகள் சனீஸ்வரபகவானிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் பிரசாதத்தை காகத்திற்கு வைப்பார்கள். காகம் பிரசாதத்தை உண்டால் தான் பூஜை நிறைவடைந்ததாக அர்த்தம். பின்புதான் பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள். எள் பொங்கல் வைப்பது இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு.

ஏழரை சனியின் தாக்கத்தால் கஷ்டப்படுபவர்கள் இந்த கோவிலுக்குச் சென்று வந்தால் சனி பகவானின் தாக்கமானது குறைந்து நன்மை ஏற்படும். தேனியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலும் குச்சனூர் அமைந்துள்ளது.