ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் அமைந்துள்ளது மகுடேஸ்வரர் திருக்கோயில். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். இத்தலம் ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில், காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. வடக்கிருந்து தெற்கு நோக்கி ஓடிவரும் காவிரி ஆறானது இவ்விடத்தில் கிழக்கு நோக்கி திசைமாறிச் செல்கிறது.
ஆதிசேனுக்கும் வாயுவுக்கும் இடையில் ஏற்பட்ட போட்டியில் மேருமலை 7 துண்டுகளாக சிதறிவிழுந்தது. அவற்றில் கொடுமுடியில் வைரக்கல்லாலான லிங்கமாக இறைவன் தோன்றினார் என்பது நம்பிக்கை.
மகுடேசுவரர் கோயில் வளாகத்துக்குள், மகுடேசுவரர் சன்னிதிக்கும் வடிவுடையநாயகி சன்னிதிக்கு நடுவில், வீரநாராயணப் பெருமாள்-மகாலட்சுமி சன்னிதிகள் உள்ளன. மேலும் வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் பிரம்மாவின் சன்னிதியும் இங்கு மிகவும் விஷேசமானது.
இது ஒரு நாகர் ஸ்தலமாகும். எனவே, நாகதோஷம் நீங்க இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். நாக தோஷம் நீங்க வன்னி மரத்தடியில் கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
அதுமட்டுமின்றி, ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் பரிகாரங்கள் செய்வதன் மூலம் திருமண தடை நீங்குவது, குழந்தை பேறு பெறுவது போன்ற பாக்கியங்களை பெறலாம் என்பது நம்பிக்கை.
மேலும், அமாவாசை நாட்களில் பிதுர் தர்ப்பணம் செய்ய காவிரிக்கரையோரம் ஏராளமானோர் கூடுகின்றனர்.
அறுபதாம் கல்யாணம், ஆயுஷ்ஹோமம் ஆகியவையும் நடத் இத்தலம் மிகவும் விஷேசம் வாய்ந்தவை.
சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் மகுடேஸ்வரர் திருக்கோயிலில் அமைந்திருக்கும் வன்னிமரத்தின் அதிசயம் என்னவென்றால், அதன் வயதை கணக்கிட முடியவில்லை. மிகவும் பழமையான இந்த மரத்தில் பூ பூக்கும். ஆனால், காய் காய்க்காது. அதுமட்டுமின்றி, இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாளானாலும் கெடுவதில்லை. இதனால், பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும் பக்தர்கள், தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டு கொண்டு செல்கின்றனர்.