புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்பது இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஒரு விழா ஆகும். எனவே, புனித வெள்ளி, அடிப்படையில் ஒரு துக்க நாள். கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஈஸ்டர் சன்டே கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறித்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அந்த வகையில் இன்றைய தினம் 15 ஏப்ரல் புனித வெள்ளியும், ஈஸ்டர் ஞாயிறு 17 ஏப்ரல் 2022 அன்று கொண்டாடப்படும்.
புனித வெள்ளி என்றால் என்ன?
கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் இன்று. இயேசு கிறிஸ்து உலக மக்களின் பாவத்தினை ஏற்று தன்னையே சிலுவை மரத்தில் பலியாக தந்ததால், ‘இயேசு கிறிஸ்து உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி’ என பைபிளில் கூறப்பட்டுள்ளது. இயேசுவின் துன்பங்களை நினைவு கூரும் நாளாக புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினத்தையும், அவர் அடைந்த துன்பங்களையும் நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படும் நாள் தான் புனித வெள்ளி.
புனித வெள்ளியின் வரலாறு
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதநேயம், ஒற்றுமை மற்றும் அகிம்சையைப் போதித்து மக்களை நல்வழியில் நடக்கத் தூண்டினார். மத மூடநம்பிக்கை கொண்டவர்கள் அவர் மீது தேசத்துரோக குற்றம் சாட்டினார்கள். அதனால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு ஆண்டவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இயேசவின் சீடரான யூதாஸ் 30 வெள்ளி காசுக்காக இயேசுவை காட்டி கொடுத்தார். பின்ஜெருசலத்தில் உள்ள காவலர்களால் இயேசு கைது செய்யப்பட்டார். இயேசு முள் கிரீடத்தை அணிந்து கொண்டு. சிலுவையை சுமந்து கல்வாரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் பல துன்பங்களையும் அடைந்தார். பின் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்தார். அனைவரின் மீதும் கொண்ட அன்பின் காரணமாக, இயேசு கிறிஸ்து மக்களின் பாவங்களுக்காக தனது உயிரை தியாகம் செய்தார். அவர் அனைவரையும் நேசித்தார். மனிதகுலத்தின் பாவங்களுக்காக அவர் மிகுந்த துன்பங்களை அனுபவித்தார். இதன் காரணமாகவே மனிதகுலம் ஒரு புதிய தொடக்கத்தைப் பெற்றது. அவர்களின் அனைத்து பாவங்களும் நிராகரிக்கப்பட்டன. மேற்கூறிய சிலுவை மரணம் கிபி 30 அல்லது கிபி 33 இல் நடந்ததாக கூறப்படுகிறது. இயேசுவின் உடலை அரிமத்தியாவைச் சேர்ந்த ஜோசப் போர்த்தி எடுத்து, அவருடைய சொந்த கல்லறையில் வைத்தார். புனித வெள்ளி அன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டாலும், பைபிளின் படி, கடவுளின் மகன் உயிர்த்தெழுப்பப்பட்டது ஈஸ்டர் அன்றுதான்.
புனித வெள்ளி அன்று, இயேசு கிறிஸ்து வாழ்க்கையின் கடைசி தருணங்கள் தேவாலயத்தில் மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டு மக்களுக்கு சேவை செய்யப்படுகிறது. இது ஒரு துக்க நாள். அதனால், இந்த நாளில் தேவாலயங்கள் மற்றும் வீடுகளில் இருந்து அலங்காரங்கள் அகற்றப்படுகின்றன. மக்கள் கறுப்பு ஆடை அணிந்து, ஆண்டவர் இயேசுவின் நினைவாக பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த நாளில் தேவாலயத்தில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்படுவதோ அல்லது மணிகள் ஒலிக்கப்படுவதோ கிடையாது. புனித வெள்ளி அன்று மக்கள் தங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கிறார்கள்.