கோடைகாலம் ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், வரும் நாட்களில், டில்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில், பகலில், 48 டிகிரி சென்டிகிரேட் அளவிற்கு வெப்பம் பதிவாகும் என கூறப்படுகிறது. அதே சமயம், வெப்பம் அதிகரித்துள்ளதால், மின்தடை பிரச்னை அதிகரிக்கும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இருக்கும் வரை, குளிர்பானம் அல்லது ஏசி மூலம் கோடையை நம்மால் சுலபமாக சமாளிக்க முடியும். ஆனால் மின்சாரம் இல்லையென்றால் என்ன செய்வது? இதற்கான மாற்று தீர்வைக் காண வேண்டிய நிலையில் நாம் அனைவரும் இருக்கிறோம். அதற்கு ஒரே வழி, நம் வீட்டை இயற்கையாக குளிர்ச்சி நிறைந்ததாக மாற்றுவதற்கான வழிமுறைகளை நாம் செய்ய வேண்டும். சரி, அதற்கு என்ன வழி உள்ளது என்று கேட்கலாம். அதற்கான சிறப்பான பதிலை தான் இந்த கட்டுரையில் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்…
வெப்பத்தை சமாளிக்க உதவும் சிறப்பு வழிகள்:-
எலக்ரானிக் பொருட்களை அளவாக பயன்படுத்தவும்
நாம் அதிக அளவில் மின் விளக்குகள் அல்லது டிவி பார்க்கிறோம் என்றால் அந்த அறை எப்போதுமே சூடாக இருப்பதை நீங்கள் உணரலாம். மற்ற அறைகளை விட அந்த அறை அதிக வெப்பம் கொண்டதாக இருக்கும். எனவே, இதைக் கருத்தில் கொண்டு, அறையில் பாதரச பல்புகளுக்குப் பதிலாக எல்.இ.டி பல்புகளைப் பயன்படுத்தவும். மேலும், கணினி-டிவி போன்ற மின்னணு சாதனங்கள் பயன்பாட்டில் இல்லாத போது அணைத்து வைக்கவும். இதனால் அறை வெப்பமாவதை சற்று குறைத்திட முடியும்.
பசுமை சூழல்
வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க மிக முக்கியமானவை பசுமை நிறைந்த சூழல். மரங்கள் மற்றும் செடிகளை விட சிறந்த இயற்கை வழி வேறு எதுவும் இருக்க முடியாது. வீட்டிற்கு வெளியேயும் உள்ளேயும் மரங்கள், செடி கொடிகளை நடவும். வீட்டிற்குள் மரங்களை நடுவதற்கு நீங்கள் சந்தையில் நிறைய தேர்வுகளை எளிதாகக் காணலாம். வீட்டிற்குள் வளர்க்கக்கூடிய செடிகளை பார்த்து பிடித்தமானதை தேர்வு செய்து வளர்த்து வாருங்கள். வீட்டின் வெப்பம் தானாக தணியும்.
ஃபால்ஸ் சீலிங்
வீட்டு கூரைகளில் ஃபால்ஸ் சீலிங் நிறுவுவது மற்றொரு சிறந்த வழி. இது கூரையின் கீழ் ஒரு கூடுதல் அடுக்கை உருவாக்குகிறது. இதனால் வெளிப்புற வெப்பம் கூரையின் வாயிலாக அறைக்குள் அதிகம் வராது. இதன் மற்றொரு அம்சம் என்னவென்றால், இது அறையின் அழகையும் கூட்டுகிறது. சமையலறையில் புகைபோக்கி வைப்பதன் மூலமும் வீட்டின் வெப்பத்தை வெளியேற்றிடலாம்.
வாட்டர் பெயிண்டிங்
பொதுவாக வீட்டிற்கு அடிக்கும் பெயிண்டுகளில் எண்ணெய் சார்ந்த பெயிண்ட், நீர் சார்ந்த பெயிண்ட் என 2 வகை உண்டு. பெரும்பாலானோர் எண்ணெய் சார்த்த பெயிண்டையே பெரியதும் விரும்புகிறார்கள். ஏனென்றால், இது அந்தஸ்துடன் தொடர்புடையது. இருப்பினும், அதன் மிகப்பெரிய தீமை என்னவென்றால், அது அறையை மிகவும் வெப்பமாக்கிவிடும். அறையின் வெப்பநிலை குறைவாக வைத்திருக்க வேண்டுமெனில், அதற்கு நீர் சார்ந்த பெயிண்டை பயன்படுத்த வேண்டும். வீட்டின் வெளிப்புறச் சுவரில் வெப்பம் குறைவாக இருக்க, ஆற்றலைப் பிரதிபலிக்கும் வெள்ளை வண்ணப்பூச்சைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் மேற்கூரைக்கும் வண்ணம் தீட்ட வேண்டியது அவசியம்.