இந்தியாவில், ஒவ்வொரு மதத்திலும் கடவுள் வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. அதிலும், சில பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் கூட மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதேபோல், வழிபாட்டின் முறைகளும் ஒவ்வொரு மதங்களிலும் வேறுபடும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, சில விஷயங்களைச் செய்வதன் மூலமோ அல்லது சில விஷயங்களைப் பயன்படுத்துவதன் மூலமோ அதிர்ஷ்டமும் மாறும் என்று நம்பப்படுகிறது. அதிலும், இந்து மதத்தில் தான் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. கடவுள் வழிபாட்டின் போது சில நேரங்களில் கவனக்குறைவாக நிகழக்கூடிய தவறுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது போன்ற சில தவறுகள் பற்றி வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதுபோன்ற தவறுகள் கடவுளின் கோபத்தை உண்டு பண்ணுமாம். எனவே, இந்த கட்டுரையை முழுமையாக படித்து இனிமேல் அந்த தவறுகள் நேராமல் பார்த்து கொள்ளுங்கள்…
கடவுள் வழிபாட்டின் போது செய்யக்கூடாத தவறுகள்
ஆரத்தி
வீடுகளில் கடவுளை வழிபடும் போது, அந்த பிரார்த்தனையானது ஆரத்தி விளக்கு இல்லாமல் முழுமையடையாது. அதுமட்டுமின்றி, கடவுளுக்கு காட்டப்படும் ஆரத்தி தீபத்தை தரையில் ஒருபோதும் வைக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எப்பொழுதும் அதை ஒரு தட்டிலோ அல்லது விளக்கு ஸ்டாண்டிலோ தான் வைக்க வேண்டும். விளக்கை தரையில் வைத்தால் கடவுளை கோபப்படுத்துவது போல் ஆகும்.
சங்கு
சங்கு என்பது இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தீபாவளியாக இருந்தாலும் சரி, துர்கா பூஜையாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு வழிபாட்டின் போதும் சங்கு இருப்பது மிகவும் பலன் தரும். ஆரத்தியின் போது சங்கு ஊதுவது மிகவும் மங்களகரமானது. இதனால் தேவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். வீட்டில் சங்கு வைத்தாலோ அல்லது சங்கு ஊதினாலோ, லட்சுமி தேவி மிக்க மன மகிழ்ச்சியடைந்து, உங்கள் வீட்டிலேயே எப்போதும் வசிப்பாள் என்பது நம்பிக்கை. ஆனால் சங்குகளை ஒருபோதும் தரையில் வைக்காதீர்கள். சங்கு தரையில் வைத்தால் லட்சுமி தேவிக்கு கோபம் ஏற்படும். அதுமட்டுமின்றி, வாழ்க்கையில் எதிர்மறை உணர்வுகளும் அதிகரித்துவிடும்.
தங்க ஆபரணங்கள்
தங்க ஆபரணங்கள் லட்சுமி தேவியின் வடிவமாகவே கருதப்படுகிறது. அதனாலேயே, காலில் தங்க நகைகளை அணியக் கூடாது என்பது ஐதீகம். இது தேவி லட்சுமிக்கு கோபத்தை ஏற்படுத்தும். மேலும், தங்க ஆபரணங்களை தரையிலும் வைக்கக் கூடாது. தங்க நகைகளை எப்போதும் ஒரு துணியில் சுற்றி வைக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள் அல்லது வெல்வெட் துணியில் சுற்றி வைத்துக்கொள்ளவும்.
சிலைகள்
கடவுளின் சிலைகள் அல்லது புகைப்படங்கள் எப்போதும் ஒரு சுத்தமான இடத்தில் மிகுந்த மரியாதையுடன் வைக்கப்பட வேண்டும். பூஜை அறையில் வாடிய மலர்கள் இருந்தால் உடனே அதை சுத்தம் செய்திடுங்கள். பூஜை அறையை சுத்தம் செய்யும் போது கூட, சிலைகள் மற்றும் படங்களை ஒரு துணி அல்லது தட்டின் மீது தான் வைக்கவும். சிலைகளை கீழே வைப்பது தெய்வங்களை அவமதிப்பதாகக் கருதப்படுகிறது.