திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டியில் அமைந்துள்ளது அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில். பெயருக்கேற்றாற்போலவே இங்கு ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். தன் வீரத்திற்கான அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடி ஆறரை அடி உயரத்தில் காட்சியளிக்கிறார்.
அதுமட்டுமின்றி, பக்தி, கருணை இரண்டும் வெளிப்படும் விதமாக ஒரு கண் அயோத்தி நோக்கியும், மற்றொரு கண் தன்னை நாடி வரும் பக்தர்களை பார்த்து உதவும் விதமாகவும் அமைந்துள்ளது. அனுமன் ஜெயந்தி, சித்ரா பவுர்ணமி, ஆடி ஆமாவாசை போன்றவை இங்கு மிக முக்கிய திருவிழாக்களாகும். அமாவாசை நாட்களிலும், சனி மற்றும் புதன் கிழமைகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.
வீர ஆஞ்சநேயரை வணங்குவதன் மூலம் வீரம், புத்தி, கலங்காத மனம், சாதுர்யம், நல்ல படிப்பு, உடல் பலம் கிடைக்கும். பணி மாற்றம் விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நல்ல பலன் கிடைப்பதாக நிறைவேறியவர்கள் கூறுகின்றனர். ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியம் என்பதால் இங்கு நவக்கிரக பீடம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு அம்மைநாயக்கனூர் ஜமீன்தார் காமயசாமியின் கனவில் வீர ஆஞ்சநேயர் தோன்றி, வைகை ஆற்றின் தென்கரையில் புதருக்குள் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதாகவும், ஆலயம் அமைத்து வழிபடும்படியும் கூறியுள்ளார். இதையடுத்து, புதரை சுத்தம் செய்த போது அங்கு சிறிய பாறை ஒன்று தென்பட்டது. ஆனால், அதனை தோண்டி எடுக்க முடியவில்லயைாம். அதுவே, பின் நாட்களில் வீர ஆஞ்சநேயராக தோன்றினார். பின்னர் அந்த இடத்தில் கோயில் அமைத்து வழிபட தொடங்கினர்.